சனந்த் – மடோனா செபாஸ்டியன் – இமயா நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார்.

ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

 

பாடலாசிரியர் சாரதி பேசுகையில், ” ‘அயோத்தி’ படத்திற்குப் பிறகு அதே நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். இரண்டுமே துள்ளலான பாடல்கள். வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. கடவுளை மறந்தாலும் காதலை மறக்காமல் இருக்க ஒரு மனம் வேண்டும் என்பதை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் கதை,” என்றார் .

நடிகர் வாட்ஸப் மணி பேசுகையில், ”இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. கல்லூரியில் படித்து முடித்த பிறகு 2014 -15களில் கிஷோர் குறும்படங்களை உருவாக்கும் போது எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் என்னுடைய பயணமும் தொடர்ந்தது. அதன் பிறகு இணைய தொடர், மியூசிக் ஆல்பம் ஆகியவற்றை இயக்கினார். தற்போது அவர் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நானும் நடித்து நடிகராக அறிமுகமாகிறேன். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் கதையை எமோஷனலாக கிஷோர் நன்றாக எழுதியிருக்கிறார். இந்தப் படம் ஒரு பீல் குட் மூவியாக இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்,” என்றார்.

 

நடிகை டெப்னிதா கர் பேசுகையில், ”என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தை 26ம் தேதி முதல் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

 

நடிகர் வர்கீஸ் மேத்யூ பேசுகையில், ”இந்தப் படத்தில் காவல்துறை சீருடையில் நடிக்கவில்லை என்றாலும், பணக்கார அப்பாவாக நடித்திருக்கிறேன். ஆனால் அதிலும் சில சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. ஊறுகாயும், வத்தலையும் பார்சல் செய்து அனுப்புகிற அப்பாவாக நடித்திருக்கிறேன். இது எனக்கு வித்தியாசமானதாக இருந்தது, ரசிகர்களுக்கும் பிடிக்கும்,” என்றார்.

 

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் பேசுகையில், ”ஹார்ட்டின் என்னுடைய ஃபேவரிட் படங்களில் ஒன்று. நான் இதில் பணியாற்றியதால் இப்படி சொல்லவில்லை. கடந்த வாரம் தான் நானும், இயக்குநரும் படத்தை முழுவதுமாக பார்த்தோம். ரேஸியான ஃபிலிமாக மட்டும் இல்லாமல், ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமும்.. தனித்துவமும் இருக்கிறது. அதிலும் கதையில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கான எழுத்து ஆழமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்கள் இருக்கின்றன. அதனை ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமாக வித்தியாசப்படுத்தி காட்சிப்படுத்தி இருக்கிறார். இதனுடன் ராஜேஷ் முருகேசனின் இசையும் இணையும் போது ஒரு மேஜிக் நடந்துள்ளது. இந்த மேஜிக்கை திரையரங்குகளில் பார்க்கலாம்,” என்றார்.

 

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், ”இந்த மேடையில் நிற்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் அதிக சுதந்திரமாக பணியாற்றிய படம் இது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இவற்றை பாடலாசிரியர்கள் சாரதி, விவேக், மோகன் ராஜன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் இளமையான படம். இதனை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்,” என்றார்.

 

நடிகை இமயா டி பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். முதல் படம் என்பதாலேயே இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தில் எனக்கும் என்னைப் போன்ற பல புது முகங்களுக்கும் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு நன்றி. இந்தப் படம் அழகானது. அனைவருடனும் எளிதாக தொடர்பு கொள்ளும் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் ஏதேனும் ஒரு விஷயம் உங்களை கவர்ந்து விடும்.

 

இந்தப் படத்தின் மூலம் சனந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்,” என்றார்.

 

நடிகை மடோனா செபாஸ்டியன் பேசுகையில், ”இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்து போய் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது ஒரு லவ் ஸ்டோரி. ஏராளமான காதல் கதைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை நீங்கள் ஃபீல் செய்வீர்கள் என்று நம்புகிறேன். ‘ஹார்ட்டின்’ படத்தை இதயப்பூர்வமாக 26ம் தேதியன்று தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்,” என்றார்.

 

கிரியேட்டிவ் கன்சல்டன்ட் மணிமேகலை பேசுகையில், ”இப்படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவினரும் கிரியேட்டர்கள் தான். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. ஒருத்தரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேர்ல் ஒருவரை மட்டும் லவ் பண்ணனுமா அப்படிங்கிற ஒரு சாய்ஸ் இல்லாமல்… லவ் பண்ணனுமா என்ற ஒரு சாய்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தால் வரும் என்று நினைக்கிறேன். இதுதான் இந்த படத்தை பார்க்கும்போது தோன்றியது. இந்தப் படத்தை இதயத்தின் மூலமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் புரியும், பிடிக்கும்,” என்றார்.

 

இயக்குநர் கிஷோர் குமார் பேசுகையில், ”இது என்னுடைய முதல் மேடை. இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் இசையமைப்பாளர் ராஜேஷ் உணர்வுப்பூர்வமாகவும், இதயப்பூர்வமாகவும், ஜீவனுள்ளதாகவும்.. இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பித்திருக்கிறோம். அதனை இரண்டு மணி நேரத்திற்கு காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

 

என்னுடன் குறும்படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய முதல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் அஜித் கோஷி, வர்கீஸ் மேத்யூ போன்றவர்களை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிகை இமயாவின் பங்களிப்பு அதிகம். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் சிக்கலானதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் ஒரு காரணம்.

 

‘காதலும் கடந்து போகும்’ படத்தை பார்த்தவுடன் மடோனா செபஸ்டியனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தின் கதையை அவர்களிடம் ஒரு நாற்பது நிமிடம் விவரித்தேன். அவர்களுக்கு நான் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. அவருடைய திரையுலக பயணத்தில் நினைவில் நிற்கத்தக்க அளவிற்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும்.

 

இந்தப் படத்தில் சனந்த் கேரக்டருக்கு ரெண்டு வெவ்வேறு வடிவங்கள் இருக்கிறது. இதனை அவருடைய அற்புதமான நடிப்பு திறனால் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை அவர் தன்னுடைய தோளில் சுமந்திருக்கிறார்.‌

 

இன்றைய சூழலில் காதலில் சுச்சுவேஷன்சிப், வெக்கேஷன்ஷிப் என எத்தனையோ ‘டேர்ம்ஸ்’ வருகிறது. ஆனால் லவ் என்ற ஒரு எமோஷன் எப்போதும் மாறாது. அந்த எமோஷன் எப்போதும் எவர்கிரீனாக இருக்கும். இதற்கு முன் எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும் ஹார்ட்டின் இவை எல்லாவற்றிலிருந்தும் தனித்து இருக்கும்,” என்றார்.

 

நடிகர் சனந்த் பேசுகையில், ” ஹார்ட்டின்… பெயருக்கு ஏற்றார் போல் க்யூட்டான பிரீஸியான படம். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது நானும் இது ஒரு வழக்கமான காதல் கதை என்று தான் நினைத்தேன். ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த கதையில் பல அடுக்குகள் உள்ளதை பார்த்தேன். அதில் ஆழமான உணர்வுகள் இருந்தது. படத்தை பார்க்கும்போது ஒரு ஆழமான உணர்வு ஏற்பட்டது.

 

இந்தப் படத்தின் ஹீரோ டெக்னீஷியன்ஸ் தான். அதிலும் ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமான விஷூவல்களை வழங்கி இருக்கிறார். ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் ஒரு ஹீரோயின் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு இரண்டு ஹீரோயின். படத்தில் இரண்டு ஹீரோயினையும் நேசித்திருக்கிறேன். படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கும் இது பிரதிபலிக்கும். இந்தப் படம் நிஜமாகவே ஆத்மார்த்தமாக இருக்கும்,” என்றார்.

Faceinews.com