தமிழகத்தில் சியட் நிறுவனத்தின் முதல் உற்பத்தி ஆலை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்
• காஞ்சீபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய பயணிகள் ரேடியல் டயர்
உற்பத்தி தொழிற்சாலையை துவக்கும்
• சியட் விழாவிற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் முன்னிலை
• 10 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்ய சியட் திட்டம்
சென்னை, பிப். 12-
இந்தியாவில் டயர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் சியட் நிறுவனம் தனது பசுமை தொழிற்சாலையை தமிழ்நாட்டில் உள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தில் திறக்கிறது. தமிழகத்தின் முதல் உற்பத்தி ஆலையான சியட் நிறுவனத்தின் இந்த ஆலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் முன்னிலை வகித்தார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் துவக்கப்படும் மிகப்பெரிய பயணிகள் ரேடியல் டயர் உற்பத்தி தொழிற்சாலையான இந்த ஆலையில் சியட் நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
163 ஏக்கரில் உள்ள இந்த தொழிற்சாலை, ஒரு நாளைக்கு 28,500 ரேடியல் டயர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இவை பயணிகள் காருக்கான டயர்கள் ஆகும். மேலும் ஒரு நாளைக்கு மோட்டார் சைக்கிள்களுக்கான 2500 டயர்களை தயாரிக்கிறது. வளர்ந்து வரும் வாகனத்துறையின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தென்னிந்தியாவிலேயே இந்த தொழிற்சாலை நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலையாகும். சியட் நிறுவனம் இதில் 1,400 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. வரும் ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ஷோரூம்களில் பெண்களை பணியமர்த்திய முதல் நிறுவனங்களில் சியட் நிறுவனமும் ஒன்றாகும். இது, சென்னை தொழிற்சாலையில் பெண்களுக்கான வேலை வாய்ப்பை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் துவக்கப்படும் இந்த ஆலையானது சியட் நிறுவனத்தின் 6வது தொழிற்சாலையாகும். ஏற்கனவே இந்நிறுவனத்திற்கு மும்பை, நாசிக், நாக்பூர், அம்பர்நாத் மற்றும் ஹலோல் ஆகிய இடங்களில் தொழிற்சாலை உள்ளது.
சிறப்பு விருந்தினரான தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இந்தியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் சியட் மற்றும் ஆர்பிஜி குழுமம் தங்கள் உற்பத்தி ஆலையை துவங்க முடிவு செய்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த தொழிற்சாலை தமிழகத்தின் மணிமகுடமாக இருக்கும். இந்த தொழிற்சாலை பல புதிய வேலை வாய்ப்புகளை தரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 18 மாத காலத்திற்குள் இந்த ஆலையை துவக்கியதற்கு சியட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கோயங்கா மற்றும் அவரது குழுவினரை நான் வாழ்த்துகிறேன். இது சியட் நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் நிர்வாகத் திறனை காட்டுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய, சியட் டயர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கோயங்கா கூறுகையில், காஞ்சீபுரத்தில் எங்களின் நவீன உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தில் பல வாகன உற்பத்தியாளர்கள் துறைமுகத்திற்கு மிக அருகாமையில் உள்ளனர். இங்கு திறமைமிக்க தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதிக வேலை வாய்ப்புகளுடன், இங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்பை சாதகமாக மேம்படுத்துவதோடு சமூகம் மற்றும் சமூகத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு பங்களிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இந்த ஆலை விரிவாக்கம் தமிழக மக்களுக்கு சிறப்பு பயிற்சி, சீருடை, கேன்டீன் மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகளுடன் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்கும். இந்த ஆலை நீர் மற்றும் சுகாதாரத்தை பாதுகாப்பதன் மூலம் இந்த ஆலைக்கு அருகில் உள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.




