அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி தேசிய கட்சி துவக்கம் .
10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல் :
நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு பல்வேறு தளங்களில் நின்று சமூக சேவையாற்றி வருகின்றோம்.
நாங்கள் கடந்து வந்த பாதையில் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகம் எந்த விதத்திலும் மேன்மை அமையவில்லை.
இந்திய அளவிலும் மக்கள் தொகையில் மாற்றுத்திறனாளிகள் 10% சதவிதத்திற்கு மேல் இருக்கின்றோம்.
ஆனால் எங்கள் மாற்றுத்திறனாளிகள் மக்கள் சக்திக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் எந்தவித குறைந்தபட்ச அங்கீகாரம் கூட தரவில்லை.
மாற்றுதிறனாளிகள் உரிமைகள் முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்டங்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் எதற்கு எடுத்தாலும் போராட வேண்டிய நிலையில் அதை ஆளும் அரசுகள் எங்களை ஒரு பொருட்டாக கூட மதிப்பளிக்கவில்லை.
எனவே, இந்த நிலை மாற மாற்றுத்திறனாகள் சமூகத்திற்கு அதிகாரம் வேண்டும் என்றதன் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எங்களின் முக்கிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றி, தேசிய அளவிலான கட்சியை தொடங்க வேண்டி “All India Disabled Party’ “அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி” என்ற கட்சியை தொடங்கி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து உள்ளோம்.
கட்சியின் தேசிய தலைவராக வழக்கறிஞர் திண்டுக்கல் எம்.முகமது அனஸ் துணைத் தலைவராக, கே.எஸ்.செந்தில்குமார் பொதுச்செயலாளராக, எம்.நாகஜோதி பொருளாளராக, ஜெ.தர்மராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
All India Disabled Party அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சியின் தேசிய தலைவர். வழக்கறிஞர் திண்டுக்கல் எம். முகமது அனஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது…
இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி மாற்றுத்திறனானிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகின்றனர்.
எங்களுக்கான தேவை என்னவென்று கூட ஆளும் அரசிற்கு தெரியவில்லை. தற்போது வரை மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை ஆளும் அரசுகள் “யாசகம் கேட்கும்” ஒரு பிச்சை பெறும் சமூகமாகவே பார்க்கின்றனர். ஆனால் எந்த சூழ்நிலையிலும் எங்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் யாரும் மதிப்பளிப்பதே கிடையாது.
எனவே தான் பிரச்சனை எங்கு இருக்கிறது அதற்கான தீர்வு எங்கு இருக்கிறது என்று தேடல் வரும் போது தீர்வு அதிகாரத்தில் உள்ளது என்பதை புரிந்துக் கொண்டோம்.
அதன்படி “மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றம் எதுவாக இருக்க வேண்டும்?” அது “அரசியல் அதிகாரமாக” இருக்க வேண்டும்.
என்ற தெளிவு ஏற்பட்டு அதற்கு ஒரே தீர்வு அரசியல் அதிகாரங்களில் மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் வந்தால் தான் சூழ்ச்சி நிறைந்த இந்த பாராபட்சம் காட்டும் அரசின் திட்டங்களில் இருந்து நம்மை காப்பாற்றக் கொள்ளவே தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகளையும், மாற்றுத்திறனாளிகள் அல்லாத மற்ற சமூக சேவகர்களையும் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளின் “விகிதாச்சாரபடி பிரதிநிதித்துவம்” வரையிலும். மற்ற அனைத்து உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தின் உரிமைகளை மீட்க பொதுவுடமை நோக்கோடு “அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி” இனிவரும் காலங்களில் செயல்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். 15 இலட்சத்திற்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகள் வாக்காளர்கள் இருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தில் உள்ள வாக்காளர்கள் எங்களோடு தோள் கொடுத்து பயணம் செய்யும் பல இலட்ச கணக்கான சமூக ஆர்வலர்களின் வாக்குகள் இப்படியாக தமிழகத்தில் மட்டும் 40 இலட்சத்திற்கும் அதிகமான வாக்கு வங்கி எங்களிடம் உள்ளது.
ஆனால் இதைப் பற்றி அனைத்தும் அறிந்த ஆளும் கட்சியோ ஆள நினைக்கும் கட்சிகளோ எந்தவித சலனமும் இன்றி எங்களின் சமூகத்தை உதாசினபடுத்தி வருகின்றனர்.
எனவே தான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 2021 எங்கள் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவத்தை தர வேண்டும்.
கீழ்க்கண்ட தீர்மானங்களை நடைமுறை படுத்த வேண்டும்.
தீர்மானங்கள்:
1, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் 5% சதவிகிதம் எங்களுக்கு என்று தனித்தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
2, தமிழகத்தில் உள்ள நகர, உள்ளாட்சிகளான பேரூராட்சிகள், நகராட்சிகள், மற்றும் மாநகராட்சிகள் போன்ற அமைப்புகளிலும் மகளிர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கியது போல 5% மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும்.
3. அரசாணை எண், 151ன் படி தமிழக அரசின் பலவேறு துறைகளில் இரண்டாண்டுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் செய்து அரசாணை வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பை நடைமுறைபடுத்த வேண்டும்.
4. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016ல் கூறியபடி எந்தவித முறை கேடுகளும் இன்றி வழங்கியுள்ள 4% சதவிகிதம் இட ஒதுக்கீட்டை மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தின் தலைமையில் அரசு வேலைவாய்ப்புகளை முறைபடுத்தி வழங்கிட வேண்டும்.
5. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாள் கோரிக்கைகளாக உதவித்தொகையை 1000 ரூபாயில் இருந்து 3000 ஆகவும். கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 1500 ரூ இருந்து 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
6. மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் 50% சதவிகிதம் எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளை மட்டுமே பணியமர்த்த பட வேண்டும். மாநில ஆணையரும் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.
7. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கல்வி அறிவில் சிறந்த மாற்றுத்திறனாளிகளை மட்டுமே பதவியில் அமர்த்தப்பட வேண்டும்.
8. தமிழக அமைச்சரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி அமைச்சரவை உருவாக்கி, அதில் எங்களை போன்ற மாற்றுத்திறனாளி ஒருவரை துறையின் அமைச்சராக அமர்த்தப்பட வேண்டும்.
9. தமிழகத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் தொடங்கவும் எளிமையான நடைமுறைகளை கொண்ட புதிய திட்டங்களை வகுக்க வேண்டும்.
10. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி சென்று வர நாடு முழுவதும் இலவச பஸ் பயண சலுகை வழங்கிட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கும். முன்வரும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவு இருக்கும்.
அவர்களுடன் இணைந்து எங்களுக்கான தொகுதியில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து 234 தொகுதிகளிலும் எங்களுக்குள் கொள்கை ஒற்றுமையுடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அனைத்த தொகுதிகளிலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் களம் காண்போம்.
கண்டிப்பாக நாங்கள் வாங்கும் வாக்கு ஒவ்வொன்றும் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கான வாக்கு என்பதால் அனைவருடைய பேராதரவுடன் பல இலட்சம் வாக்குகள் பெறுவோம். எங்களின் வாக்கு வங்கியினால் பலரது வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படும்.
இவ்வாறு அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சியின் தேசிய தலைவர் வழக்கறிஞர் திண்டுக்கல் முகமது அனஸ் கூறினார்.





