மருதநாயகம் பிள்ளை (எ) முகமது யூசுப் கான். ஒரு மாவீரனின் சிறப்புமிக்க வரலாற்றை, மேடை நாடக வடிவில் அரங்கேற்றுவது என்பது, மிக கடினமான ஒரு செயல்.
தசா ஆர்ட்ஸ், திரு. மதுரை கண்ணன் அவர்கள், தனது பல வருட கனவை, ஆசையை, சிறப்பாக நிஜமாக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
திரு. தம்பி பன்னீர்செல்வத்தின், தேர்ந்த வசனத்துடன், டாக்டர். கிரி அவர்களின் இயக்கத்தில், திரு. மதுரை கண்ணன் அவர்களின் பிரமிப்பூட்டும் செட்டிங்குகளுடனும், மேடையில் இந்நாடகத்தை காண கண் கோடி வேண்டும்.
கதைக்களம், மருதநாயகத்தின் சிறு வயதிலிருந்து தொடங்கி, அவன் வாலிபப் பருவத்தை தாண்டி, அவனது இறுதி மூச்சு வரை செல்கிறது.
சிறுவன் மருதநாயகம், யூசுப் கானாக நடித்திருக்கும் செல்வன். சரவணகுமாரின் நடிப்பு நேர்த்தி. தனது வளர்ப்புத் தந்தை அன்வர் பாய் (திரு. இரவிகுமார்) மற்றும் வளர்ப்புத் தாய் ஆயிஷா (திருமதி. சுனந்தா) ஆகியோரை பிறிந்து, ஜெனெரல் ஜாக்விஸ் லா (திரு. S. ஆனந்த்) மூலம், பிரெஞ்சு படையில் சேர்ந்து, போர் பயிற்சிகளில் நன்கு தேர்ச்சி பெற்று, பின், சிலரது சூழ்ச்சியால், பிரெஞ்சு ஆட்சியாளர்களிடமிருந்து, பிறிந்து, ராபர்ட் கிளைவின், நம்பிக்கைக்குரிய வீரனாய், பிரிட்டிஷ் படையில் சேருகிறான் மருதநாயகம். அதன்பிறகு மருதநாயகத்தின் நிலை என்னவாயிற்று என்பதுதான் கதை.
இளைஞன் மருதநாயகமாக வரும் திரு. பிரகாஷ் குட்டி அவர்களின் நடிப்பு, சிறப்பு. வசன உச்சரிப்பு பிரமாதம்.
மருதநாயகத்தின்பால், காதல் கொள்ளும் மாஷாவின் (செல்வி. சுகாசினி) கதாபாத்திரம் அருமை. சுஹாசினியின் நடிப்பு அற்புதம்.
மார்ச்சந்த் கதாபாத்திரத்தில் வரும் திரு. விக்னேஷ் அவர்களின் நடிப்பு நாடகத்தை பார்க்க வரும் அனைவரின் வரவேற்புக்குரியது.
நாடகத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்திற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள் அனைவரும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், திருவாளர்கள். ஜனார்தனன், ஜெகதீஷ், பிரகாஷ், விடியல் விநாயகம், ராஜேந்திரன், உதயகுமார், ஸ்ரீனிவாசன், விஷ்ணு, திருமதி. கற்பகம், ஸ்ரீலதா, செல்வி. மாலினி மற்றும் பலர்.
போர்கள வாள் சண்டைக்காட்சிகளை இயக்கிய திரு. முருகேசன் அவர்களின் கைவண்ணம், வீரத்தின் பிரதிபலிப்பு.
திரு. மனோ அவர்களின் ஒலி இயக்கம், நாடகத்தின் சிறப்பம்சம்.
இசை திரு. அலெக்ஸ், காட்சியின் தன்மைக்கேற்ப சிறப்பாக இசை அமைத்திருக்கிறார்.
மருதநாயகம், திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும், சிறப்பான நாடகம்.
திரு. மதுரை கண்ணன் அவர்களின் முயற்சி வெற்றியே.
எஸ்.ஆனந்த் – நடிகன் குரல்